செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வான் நோக்கி வாழுது உலகெலாம்














தலைவன் என்பான் தனி உலகில் பிறப்பான்
நாம் அறம் கொல்லலாம்
அவன் அறம் கொள்ள வேண்டும்

நாம் பொய் உரைக்கலாம்
அவன் மெய் போற்ற வேண்டும்

பொருள் சேர்க்க இருள் புகலாம் நாம்
அவன் அவ்விருள் நீக்கி
நம் மருளும் துடைக்க வேண்டும்

நமக்கான தலைவனை உள்நோக்கி தேடாமல்
வான் நோக்கி வாழ்கிறோம்; அதுவும் சரிதான்
தலைவன் என்பான் தனி உலகில் பிறப்பான்.

புதன், 29 மார்ச், 2017

அவனும் அவன் சமூகமும்

எந்த பெண்ணின் கூந்தலை கண்டும் பயப்படாமல் வளர்ந்து நிற்க்கும்
பூக்கள் போல
எந்த சமூகத்தை கண்டும் பயப்படாமல் வாழ நினைத்து,
யானை அங்குசம் கண்டு
மிரள்வது போல்
சமூகத்தின் அங்குசம் கண்டு
அவன் மிரண்டு,
தச்சன் கழித்த மரத்துகள் கொல்லனுக்கு பயன்படுவது போல்
 அவன் கழித்த கனவுகள்
யாருக்காயினும் பயன்படும்
என நினைத்து,
அடிமைகளோடு அடிமையாய்
உணர்ச்சிகள் அற்ற ஒரு பிரேதத்தை
கொண்டு மிகப் பிரமாதமாய் நடித்து கொண்டிருக்கிறான்.
அவன் சமூகமும் அப்படியே.
#1
எந்த பூனையும் எந்த தேசம் போனாலும் பூனையாகவே இருக்கிறது
அவன் மட்டும் அப்படி அல்ல,
அவன் சமூகமும் அப்படியே.
#2
தேங்கி கிடக்க வெட்கப்பட்டு ஆறுகள்
விரைவாக வற்றிவிட ஆசைப்படுகிறது.
சமூகத்தில் தேங்கி கிடக்க அவன்
ஒருபோதும் வெட்கம் கொள்ளவில்லை
அவனும் அப்படியே
அவன் சமூகமும் அப்படியே
#3
-தோழர் அஜீக் தமிழ்

சனி, 4 மார்ச், 2017

குறைவொன்றும் இல்லை















லட்சம் கடவுள் நாம் படைதோம்
அவரில் குறைவொன்றும் இல்லை
அவர் 'படைத்த' மனிதனிடம் தான் 
எத்தனை எத்தனை குறைகள்
மனம் மொழி மெய் என யாங்குமே
ஆயினும்
குறைவொன்றும் இல்லை
'மறைமூர்த்தி கண்ணா'
குறைவொன்றும் இல்லை!

வெள்ளி, 3 மார்ச், 2017

பாவம் கோட்ஷே

காந்தி ஆகலாம் என நினைத்தேன்
முடியவில்லை
சரி கோட்ஷே ஆகலாம் என்றால்
நாட்டில் காந்தியே இல்லை

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கொலைவாளினை எடடா

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

- பாவேந்தர் பாரதிதாசன்