புதன், 31 ஆகஸ்ட், 2016

காளமேகரின் புலமை

காளமேகம் கடற்கரையோர நாகப்பட்டினம் காத்தான் சத்திரத்தில் பசியோடு காத்திருந்தார். சாப்பாடு ஒரேயடியாகத் தாமதம் ஆனது. ஒரு வழியாக சாப்பாடு பரிமாறப்பட்டு அவர் சாப்பிட்டும் முடித்தார். காளமேகத்தின் பெருமை அறிந்த சாத்திரப் பொறுப்பாளர் அவரை ஒரு பாடல் பாடச் சொன்னார்.

           கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
           அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
           உலையிலிட ஊரடங்கும்;ஓரகப்பை அன்னம்
           இலையிலிட வெள்ளி முளைக்கும்

என்று பாடினார்.

அத்தமிக்கும் – சூரிய அஸ்தமனம்
ஊரடங்கும் – எல்லாரும் உறங்கிப் போவார்கள்
வெள்ளி முளைக்கும் – விடிந்து விடும்

சத்திரப் பொறுப்பாளருக்கு வருத்தம். “அன்னமிட்டோர் உள்ளம் நோக பாடுதல் முறையா?” என்று வருத்தமாகக் கேட்டார். காளமேகம் அவரது பாடலுக்குச் சொன்ன விளக்கம் :

அத்தமிக்கும் போதில் அரிசி வரும் என்றால், பஞ்சத்தில் எல்லா இடத்திலும் அரிசி அத்தமித்தாலும் (மறைந்தாலும்) காத்தான் சத்திரத்துக்கு அரிசி வரும். அதை அள்ளி உலையிலிடும் போதே அந்த நல்லெண்ணத்தில் ஊரின் பசி அடங்கும். ஒரு கரண்டி சோறு இலையில் வைத்ததும் பளீரென்று வெள்ளி நிறமாக ஜொலிக்கும்.

சத்திரப் பொறுப்பாளர் சாந்தமானார். அங்கதச் சுவை நிறைந்த பாடல் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக